GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்கினாலும் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்பில் இருக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP  பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான சரியான வழியில் இலங்கை பயணித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான GSP பிளஸ் தொடர்பில் 58 விடயங்கள் தொடர்பில் ஐரொப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் மனித உரிமை விடயங்களே பிரதானமானவையாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது எந்த நாட்டுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்காக அழுத்தம் கொடுக்காது.

எனினும் ஜிஎஸ்பி பிளஸ் என்பது ஒருநாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துதலை வழங்கக்கூடியது. எனினும் அது ஒருநாட்டின் மனித உரிமை காப்புக்கான பரிசு அல்ல என்று டேவிட் டெலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கினாலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் டெலி தெரிவித்துள்ளார்.

இன்னும், ஐரோப்பிய ஒன்றியம் 2016ம், 17ம் ஆண்டுகளுக்காக சிவில் சமூக வலுப்படுத்தலுக்காக 700 மில்லியன் ரூபாய்களையும், சிவில் சமூக அமைப்புக்களுக்கும் உள்ளுர் அதிகாரிகளுக்கும் ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட எண்ணியுள்ளதாக டெலி தெரிவித்துள்ளார்