லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

ஜே.வி.பியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன விவகாரம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

லலித், குகன் காணாமல் போனமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை யாழ். நீதிமன்றில் இன்று (13) நடைபெறுகின்றது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி யாழ். நகரில் வைத்து லலித் மற்றும் குகன் ஆகிய இரு இளைஞர்களும் இனந்தெரியாத கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

முன்னைய ஆட்சியின் போது நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது லலித், குகன் உயிருடனேயே இருப்பதாக அப்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்த வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக சாட்சி வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல இன்றைய தினம் யாழ். நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.