குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு முடிவுகள் பிழை – மீள் வாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம்

குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு முடிவுகள் தவறானவை என அது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவித்துள்ளது.

கடந்த 5ம் திகதி 55 மில்லியன் ரூபா பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது 33 வாக்குகளுக்கு 31 வாக்குகள் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக மேலும் அறிவிக்கப்பட்டது.

எனினும், குறைநிரப்புப் பிரேணை வாக்கெடுப்பு தவறானது என கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்ததுடன் கடும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில், வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சம்பந்தன் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஏற்கனவே வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் லக்ஷ்மன்  கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்கின்றீர்களா, ஆவணத்தில் கையொப்பிடப் போகின்றீர்களா என சபாநாயகரிடம் இதன் போது கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கையொப்பமிடப் போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானால் மீளவும் குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பித்து வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீளவும் குறைநிரப்புப் பிரேரணையை சமர்ப்பிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(நன்றி – ரிவிர)