கிழக்கு முதலமைச்சரை கடற்படையிடம் மண்டியிட வைத்ததே ஹக்கீம்

இலங்கை கடற்படை அதிகாரியை அவமதித்ததற்காக, அவரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாதன ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

கிண்ணியாவில், நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“கடற்படை அதிகாரியிடம் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்புக் கோரிய பின்னர், இந்தச் சூழ்நிலை ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆய்வு செய்ய முடியும்.

இந்தச் சம்பவங்களை வைத்து சில சக்திகள் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றன. அந்த சக்திகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

பிளவுகளை ஏற்படுத்த முனையும் சக்திகளின் பொறிக்குள் நாம் அகப்படக் கூடாது. இந்தச் சம்பவங்களின் பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கக் கூடும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமரும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

கடந்த ஜனாதிபதி  தேர்தலில் நாம் பேய்களை புதைத்தோம். அவை மீண்டும் எழுந்திருக்காத வகையில் வழிகளைத் தேட வேண்டும்.

இன்னும், இலங்கை  முஸ்லிம் காங்கிரசின் தலைவர் என்ற வகையில், நாட்டின் உறுதிப்பாட்டில் கவனம் செலுத்தியும், சிறுபான்மையினரின் கௌரவத்தைக் கருத்தில் கொண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முனைகிறேன்.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.