முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் யோசித்த ராஜபக்ஷவின் கார்ல்டன் ஸ்போட் நெட்வேக்கின் முன்னாள் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் சிந்தித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த வாரத்தில் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.எனினும் விமான நிலையத்தில் அவரை மூன்று மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்திய சிங்கப்பூரின் குடிவரவு அதிகாரிகள், அவரை இலங்கைக்கு திருப்பியனுப்பினர்.
வெலிவிட்ட, ஏற்கனவே இலங்கையின் நீதிமன்றத்தில் கால்ட்ட்ன் நெட்வேக் பணச்சலவை குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.
அத்துடன் அவர் நீதிமன்ற அனுமதி பெற்றே சிங்கப்பூருக்கு சென்றார். இந்நிலையில் அவரை நாடு கடத்தியமையானது குடிவரவு சட்டங்களை மீறிய செயலாகும்.
எனவே சிங்கப்பூர் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக சிந்தித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.