படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்படி, 6 மாதங்களுக்கு மேல் கடமைக்கு சமூகமளிக்காதவர்கள் இந்த பொதுமன்னிப்பு காலத்தில் சரணடைந்து தண்டனையின்றி படைகளிலிருந்து விலகவோ, விரும்பினால் சேவையை தொடரவோ முடியும்.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மற்றும் விடுமுறையின்றி வீட்டில் உள்ளவர்கள் வந்து பொதுமன்னிப்பு பெறமுடியும்.

இந்த 6 மாத கால வரையறை, இராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு பொருந்தும் என்பதுடன் கடற்படையிலிருந்து தப்பிச்சென்று 3 மாதங்கள் கடமைக்கு சமூகமளிக்காதவர்களும் பொதுமன்னிப்பு பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(நன்றி – மேனகா மூக்காண்டி, ஜே.ஏ.ஜோர்ஜ்)