குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அலியின் இறுதிக்கிரியைகள் இன்று

குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

´தி கிரேட்டஸ்ட்´ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம் சார்ந்த பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்தவாரம் காலமானார்.

காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முகமது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார்.

சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால்  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முகமது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நான்காம் திகதி அவர் காலமானார்.

மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் உடல் கடந்த ஆறாம் திகதி அரிசோனா நகரில் இருந்து கென்ட்டுக்கி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

சவப்பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முகமது அலியின் உடலுக்கு கடந்த மூன்று நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறப்புக்கு பின்னர் தனது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குடும்பத்தாரிடம் முஹம்மது அலி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று இறுதிச்சடங்குகள் தொடங்கியது. கலிபோர்னியா நகரை சேர்ந்த சைத்தூன்யா கல்லூரியின் நிறுவனரான இமாம் சைத் ஷாகிர் தலைமையில் நடைபெற்ற ‘ஜனாசா’ தொழுகையில் சாதி, மதபேதங்களை கடந்த நிலையில் சுமார் 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சர்வமத பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், துருக்கி அதிபர் தாய்யிப் எர்டோகன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்ட்டல் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முகமது அலியின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.