இலங்கை மத்திய வங்கியில் நடந்த முறிப்பத்திர விற்பனை தொடர்பான சகல தகவல்களையும் வழங்குமாறு கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு, மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கட்டாயமாக தகவல்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
திறைசேரி முறிப்பத்திர விற்பனை தொடர்பில் அரச கணக்காய்வாளரும் விசாரணைகளை நடத்தினார்.
எனினும் அந்த விசாரணைகளில் போதுமான தகவல்களை பெற்றுக்கொள்ள கணக்காய்வாளரால் முடியாமல் போயுள்ளது என்பதால், கோப்குழுவிடம் தகவல்களை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.