ஆளுநரை எதிர்த்து வீதியிறங்கிய ரோஹித வைத்தியசாலையில் அனுமதி..

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக தற்போது கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் கருப்பு ஆடை அணிந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 30 ம் திகதி பதவிக் காலம் முடிவடையும் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது, பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலக வீதியால் பயணித்துக்கொண்டிருப்பதால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் மட்டுமன்றி எதிர்வரும் நாட்களிலும் இந்தப்போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசின்ஹவுக்கெதிராகவும் தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் குறித்த போராட்டத்தில் ரோஹித அபேகுணவர்தன காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.