எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுத்த தீர்மானம் குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது.
இந்தக் குறித்த காலப்பகுதியில் இலங்கையும் நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை குறித்து மத்திய வங்கி, பிரதமருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு பிரித்தானியாவிற்கு இன்னமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே உலகப் பொருளாதாரத்தில் இந்தக் காலப்பகுதி நிச்சயமற்றதாகவே அமையும் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 40 வீதமானவை பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால் இந்த நிலைமையானது நிச்சயம் இலங்கையை பாதிக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானிய வெளியேற்றம் காரணமாக ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள் எதிர்பார்த்தளவு அதிகளவில் கிடைக்காது என தெரிவித்துள்ளது.