பங்களாதேஷில் இன்றும் நாளையும் துக்க தினமாக அனுஷ்டிப்பு

பங்களாதேஷ் டாக்கா நகரில் உணவகம் ஒன்றில் ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை கருத்தில் கொண்டு இன்றும் (03) நாளையும் (04) என இரண்டு நாட்கள் பங்களாதேஷில் நாடளாவிய ரீதியில் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றது என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களாவார். இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்ட 13 பேர், 12 மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டனர்.

ஆயுததாரிகள் 06 பேர் இதில் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 09 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள், 07 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்க பிரஜை எனவும் மற்றும் இந்தியப் பிரஜைகளும் அதில் அடங்குகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன