உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி சீட்டுக்கள் கிடைக்காதவர்கள் முறையிடலாம்

 

இம்முறை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி சீட்டுக்கள் கிடைக்காதவர்கள் அது தொடர்பாக தமக்கு முறையிடலாம் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல்.டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை வாரியான பரீட்சாரத்திகளுக்கு அதிபர் ஊடாகவும், வெளிவாரியான பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிக்கு தபால் ஊடாகவும் குறித்த அனுமதி  சீட்டுக்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளோர் தமது விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை இம்மாதம்  15ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் கிடைத்தவர்கள் தம்முடைய பெயர், தோற்றவுள்ள பாடங்கள் மற்றும் தோற்றும் மொழி என்பவற்றை சரியாக குறிப்பிட்டு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புமாறு ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.