தற்போது 72 சதவீதமாகவுள்ள சிகரெட்டுக்கான வரியை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கான யோசனையை, அமைச்சரவையில் அடுத்த வாரம் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிகரெட்டுக்கான வற் (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி)ஐ நீக்கவுள்ளதாகவும் கூறினார்.
வற்-இல் கிடைக்கும் இலாபத்தை விட, புகையிலைப் பொருட்களுக்கு அறவிடப்படும் வரியை அதிகரிப்பதால் அதிக வருமானம் கிடைக்கும் எனத் தெரிவித்த அவர், சுகாதார சேவைக்கான ‘வற்’ஐயும் நீக்க யோசனை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘வரியை அதிகரிப்பது தொடர்பில், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியுள்ளேன். ஜனாதிபதியினதும் எனதும் ஒன்றிணைந்த யோசனையாகவே இவ்விடயம், அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
2014ஆம் ஆண்டில், புகையிலைப் பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்காமையினால், சிகரெட் கம்பனியே, சிகரெட் விலையை அதிகரித்துக்கொண்டது. எப்போதும் அரசாங்கமே, சிகரெட் விலைகளை அதிகரிக்கும். ஆனால், அந்த வருடத்தில், கம்பனியே விலையை அதிகரித்தது. அப்போதே, வரி 72 சதவீதமாகியது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்தபோது, சிகரெட் பக்கெட்டுகளில் 80 சதவீதமான எச்சரிக்கைப் படங்கள் காணப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.