இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தனது முதலாவது டெஸ்ட் போட்டியை ஜூலை 26ஆம் திகதி விளையாடவுள்ள நிலையில், இலங்கையின் வானிலையே பாரிய சவாலாக உள்ளதாக, அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
“வானிலை, பாரியதொரு சவால். மிகவும் வெப்பமானதும் ஈரலிப்பானதுமாகும். இங்குள்ள நிலைமைகள் மிகவும் வேறுபாடானவை, மேற்கிந்தியத் தீவுகளிலும் இந்தியாவிலும் இருப்பதைப் போன்று. மிகவும் அந்நியமானதல்ல, ஆனால் ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியதும், இதமாக உணர்வீர்கள்.
ஆனால், ஆடுகளம் சேதமடையத் தொடங்கினால், ஓட்டங்களைக் குவிப்பதற்குக் கடினமாக அமையலாம்” எனத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலேயே அவுஸ்திரேலியா விளையாடிவந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும், சவாலாக அமையுமென, கவாஜா தெரிவித்தார்.
அவ்வணி, இறுதியாக இவ்வாண்டு பெப்ரவரியிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தது.
“சிறிது காலமாக நாங்கள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. குழாமுக்குள் விளையாடிய போட்டியில், சிவப்புப் பந்து வரும் போது, வித்தியாசமாக இருந்தது. நாள் முழுவதும் களத்தடுப்பில் ஈடுபட்டோம். களத்தில் இருப்பது, எவ்வளவு கடினமென்பதை மறப்பதுண்டு” என அவர் தெரிவித்தார்.