டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி ஓய்வுபெறுகிறார்

உலகம் முழுவதும் இணையத்தள  பயன்பாட்டாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாக பதவிகளில் மாற்றங்களை செய்து வந்த அவர், தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அதன் நிர்வாக குழுவை வேண்டியுள்ளார்.

இதையடுத்து வரும் ஜூலை 1ம்  திகதி  தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து ‘டிக்’ விலகுவார் என கூறியுள்ள நிறுவனம்; அதன் இணை நிறுவனரும், முன்னாள் தலைவருமான ஜேக் டோர்சீ இடைக்கால புதிய தலைமை செயல் அதிகாரியாக செயல்பாடுவார் எனவும் கூறியுள்ளது.

விரைவில் இந்நிறுவனத்துக்கான நிரந்தர தலைமை செயல் அதிகாரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டர் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பு மாறுகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் டுவிட்டரின் பங்குகள் 7 சதவீத உயர்வை சந்தித்தது. தற்போது 302 மில்லியன் பயனாளர்கள் டுவிட்டரில் செயல்பட்டுக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.