இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து எந்தக்கவனமும் இல்லை – ஜனாதிபதி.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து, இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில், எந்தவொரு கலந்துரையாடல்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கனேலந்த ரஜமகா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையின் தலைமன்னாருக்கு இடையில் பாலம் அமைக்க உள்ளதாகவும், அது நடக்குமானால் அதனை வெடிக்க வைப்பதாகவும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்ததாக, ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நிர்மாணித்தால் வெடிக்க வைப்பது எவ்வாறு என, அவரை எண்ணி தனக்கு சிரிப்பு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அண்மையில் இந்தியாவின் மாநில அமைச்சர் ஒருவர் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைக்கவுள்ளதாகவும், இதன் பொருட்டு உலக வங்கி நிதி ஒதிக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டதாக, ஜனாதிபதி இதன்போது நினைவூட்டினார்.

இது உண்மையில் பொய்யான பிரச்சாரம் எனவும், இவ்வாறு இலங்கையில் உள்ள சிலரைப் போல, இந்தியாவிலும் அரசியல் இலாபங்களுக்காக பொய் கூறும் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான பிரச்சாரங்களைக் கொண்டுதான் எமது நாட்டு மக்களை தவறாக வழிநடத்த சிலர் முற்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறான முட்டாள்தனமான மற்றும் நாட்டுப்பற்றில்லாத நடவடிக்கை எப்போதும் மேற்கொள்ளப்படமாட்டது எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறியுள்ளார்.