உடன் அமுலுக்கு வரும் வகையில் 4 அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக நிதி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சுகாதாரம், கல்வி, பெருந்தெருக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு நிதி மற்றும்
கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளன.இலங்கை கணக்காளர் சேவையிலுள்ள தொழிற் தகைமையுடைய கணக்காய்வாளர்கள் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மேலும் அறிவித்துள்ளார்.
ஒரு வருடத்துக்கு 100 பில்லியன்களுக்கு அதிகளவில் செலவு செய்யும் அமைச்சுக்களுக்கு இவ்வாறு நிதி மற்றும் கணக்கு தொடர்பான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சுக்கு மேலுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் தீர்மானத்திற்கு சுகாதார பணிப்பாளர் பாலித மகிபால உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.