தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான பிளைளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திகாந்தனின் பிணை மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தனக்கு பிணை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் கோரியிருந்தார்.
குறித்த பிணை மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மட்டக்களப்பு மேல் நீதீமன்ற நீதிபதி வி.சந்திரமதி, பிணை வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லையென தெரிவித்து பிணை மனுவினை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளார்.