பம்பலபிட்டி வர்த்தகர் கொலை – திருமணத்திற்கு 5 லட்சம் வழங்கிய ஷகீபினை கொன்ற முழு விவரம்.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் ஷகீப் சுலைமானின் கடத்தல் சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த வர்த்தகர் அவருடைய வியாபார நிலையத்தின் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு நம்பிக்கையின் நிமித்தம் அருகில் வைத்திருந்த மொஹமட் அஸ்லம் மொஹமட் பஸீர் என்பவர் மூலமே குறித்த இந்த ஷகீப் கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது.

பஸீர் அஸ்லம் என்பவர் 08 ஆண்டுகளாக வர்த்தகர் ஷகீப் சுலைமானிடம் வேலை பார்ப்பதனால், நம்பிக்கையின் நிமித்தம் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை கவனிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களை தௌிவூட்டு வகையில் நேற்று(02) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு கூறினார்.

உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் இந்தியா,சீனா,இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து ஆடைகள், துணிவகைகளை இறக்குமதி செய்து போக்கொட்டை 3ம் குறுக்குத் தெருவில் மொத்த விற்பனை நிலையமொன்றை நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பாரிய அளவான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அறிந்த பஸீர் அஸ்லம் மொஹமட் என்பவர் இவ்வாறு கப்பம் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்ட 08 பேரை தற்சமயம் கைது செய்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

ஏலவே பஸீர் அஸ்லம் மொஹமட் என்பவரின் திருமண நடவடிக்கைகளுக்கு, வர்த்தகர் ஷகீப் சுலைமான் 05 இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளதுடன்,மணமகன் செல்ல மொண்டேரோ வகை ஜீப் ஒன்றினையும் வழங்கியுள்ளார். அவரின் மனைவியும் 50,000 ரூபா பணம் வழங்கியுள்ளார்.

வர்த்தகரை கடத்துவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்குளி பிரதேசத்திலிருந்து 45,000 பணம் செலுத்தி வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடைய தங்க ஆபரணம் ஒன்றை அடகு வைத்து வாகனத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடத்தல்காரர்களின் நோக்கம் இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவது என்பதுடன், தட்டையான தடி ஒன்றினால் தாக்கப்பட்டதனால் ஷகீப் சுலைமான் உயிரிழந்ததை கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வௌிநாடு சென்றிருந்த ஷகீப் சுலைமானின் தந்தை மறுநாள் நாடு திரும்பியதால், மகனை காப்பாற்றுவதற்காக குறித்த பணத்தொகையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன், ஷகீப் சுலைமான் கடத்தப்பட்ட மறு தினமே பிரதான சந்தேக நபர் வழமை போன்று வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் ஒரு சில தினங்களில் சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும், சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.