கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் சோதனை..

இலங்கைக்கு பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிகா(Zika) வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், அதனை உறுதி செய்யும் நோக்கிலும் குறித்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றில் சிகா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், குறித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் தொற்று பற்றிய சுயமதிப்பீடு செய்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரமும் விநியோகம் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில், சிகா நோய்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் அங்கொடையில் உள்ள தொற்று நோய் பிரிவுக்கு அழைத்து செல்லுதல் அவசியம் என சுகாதார சேவை தகவல்கள் கூறியுள்ளன.

இதேவேளை, சிகா வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ள கர்ப்பிணித் தாய்மாரை பிரசவ காலம் முடியும் வரையில் அவ்வாறான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிகா நோய் தொற்று அற்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நிலையினை தொடர்ந்தும் தக்க வைத்து கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.