பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவனால் பொலிஸ் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்ட பாடசாலை மாணவர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமை குறித்த விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னதாக இந்த மாணவர் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கும் வகையில் ஓர் இலச்சினையை இணையத்தளத்தில் போடுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், குறித்த அந்த இலச்சினை இணையத்தளத்தில் காட்சியாகியிருக்கவில்லை. அதன் பின்னர் அவர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸ் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட மாணவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.