தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக மனோ தெரிவிப்பு..

அரசியலிலிருந்து  தான் வெகுவிரைவில் ஓய்வு பெற உள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற  சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவிலாளர்களின் செயமர்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மனோ கணேசன், அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இரண்டாம் மொழியை கற்பதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அதனால் அவர்களால் பிரச்சினைகளை அடையாளம் காணமுடிவதில்லை எனவும் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தாம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் போது சிங்கள மொழியை அறிந்திருக்காத போதிலும் தற்போது மும்மொழிகளையும் கற்றறிந்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள மொழியை கற்பதில் பந்துல குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தமது ஆசான்களாக இருந்த போதிலும் அவர்களின் அரசியலை தாம் கற்றுக்கொள்ளவில்லை என மனோ கணேசன் கூறியுள்ளார்.