சென்னையில் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கமெரா வைத்து ஆபாசமாக படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் அடுத்த பெசண்ட் நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியின் மேல் வீட்டில் தங்கியிருப்பவர் தாமோதரன் (27).
இவர் சமீப காலமாக தனது வீட்டின் கீழே உள்ள பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் கைப்பேசியை வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாசமாக படமெடுத்து சம்பந்தபட்ட பெண்களிடையே அதிக பணம் பெற்றதுடன், தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இந்த விடயம் தற்போது விடுதி நிர்வாகிக்கு தெரிய வரவே நிர்வாகி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலைப் பெற்ற பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தாமோதரனை விசாரிக்கையில் தான் ஒரு சி,பி.ஐ.அதிகாரி என தெரிவித்துள்ளார். இதனால் சற்று பின் வாங்கிய பொலிசார் தாமோதரன் மீது சந்தேகம் ஏற்படவே அவரை காவல்துறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்கள் குளியலறையில் ஆபாசமாக வீடியோ எடுத்தது உறுதிபட தெரிய வந்துள்ளது. மேலும், அவர் போலி சி.பி.ஐ. என்பதும், வழக்கறிஞர், பிரபல தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரி என பல போலி அடையாள அட்டைகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த போலி அடையாள அட்டைகளை வைத்து ஏதேனும் முரண்பாடான செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.