முன்னாள் பிரதி அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

முன்னாள் பிரதி அமைச்சரான பிரேமலால் ஜயசேகரவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

‘சொகா மல்லி’ எனப்படும் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் இன்று(13) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த குற்றப்பத்திரிகையில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.

அருன நிலந்த ஜயசிங்க, வஜிர தர்சன டி சில்வா, பெதும் தனஞ்சய, அசங்க நாமல், திலங்க பிரதீப் மற்றும் அஜித் மாலவி குணரட்ன ஆகிய மேலும் ஆறு பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி கஹவத்தை நகரில் அப்போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு சென்று அலங்காரத் தோரணங்களை உடைத்து எறிந்து குழப்பம் விளைவித்ததாகவும், பிரேமலால் உள்ளட்ட தரப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாந்த பெரேரா என்ற நபர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.