ஐ.நா 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புடன் இன்று ஆரம்பம்..

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர், இன்று(19) ஆரம்பமாகும். இந்தக் கூட்டத்தொடரில், கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நியூயோர்க் பயணமானார்.

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரானது, இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் புதன்கிழமையன்று(21)  பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.

தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டத்தொடராக இக்கூட்டத்தொடர் அமையவுள்ளதுடன், அவர் தனது பிரியாவிடை உரையையும் ஆற்றவுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் நிர்வாகப் பகுதியிலுள்ள செல்சி என்ற இடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில், குறைந்தது 29 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக உலக நாட்டு தலைவர்கள் நியூயோர்க்குக்கு விஜயம் செய்துள்ளமையால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.