ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக மேலும் ஏழு விமானங்கள் கொள்வனவு.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை கடந்த சில வருடங்களாக பெரும் நட்டத்தில் இயங்கியமையினால், அண்மையில் குறித்த விமான சேவைக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு, தொட்டலங்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கிய போதிலும் தேசிய விமான சேவையை நடத்திச் செல்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அதன் காரணமாகவே புதிதாக ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.