கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள பிரபல்யமான இரவு கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற அட்டகாசம் தொடர்பில், ஊடகங்கள் மௌனமாகவே இருக்கின்றன. இதுவா ஊடக சுதந்திரம் எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சிறிசேனவின் மகனே இந்தத் தாக்குதலை மேற்கொண்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதியின் மகன்மார், இரவு விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும், எனினும் அவர்கள், ஒவ்வொரு நாளும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஊடக சுதந்திரம் இருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. அந்த கேளிக்கை விடுதிக்கு அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவுடன் சென்றே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின், விபத்துச் சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தோர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில், சனிக்கிழமை நடத்திய, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமல் இவ்வாறு கூற, குறித்த விடுதியின் முகாமையாளர் சம்பவம் தொடர்பில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சம்பவத்துடன் அரசியல் வாதிகளின் மகன்மார் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும், வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=9b-XAm9xBfE” width=”560″ height=”315″]