தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வரைபிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக சிவில் சமூகத்தினர் ஏற்கனவே தங்களது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த உத்தேச சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவுமில்லை.
இவ்வாறான நிலையிலேயே இந்த சட்டமூலத்திற்கான வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சட்டமூல வரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதோடு சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த சட்டமூல வரைபு சம்பந்தப்பட்ட அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவிற்கு முன்வைக்கப்படவுள்ளது.
மேற்பார்வைக் குழுவினால் இது ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.