பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க தனித்து செயல்பட தயங்க மாட்டோம் – அமெரிக்கா எச்சரிக்கை.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் அமெரிக்க அமைப்பின் செயலாளர் ஆதம் சுபின், வாஷிங்டனில் உள்ள பால் எச் நிட்சே பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில்;

தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும் ஆளாகிறது. அங்குள்ள பள்ளிகள், சந்தைகள், மசூதிகள் உட்பட பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன.

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்கும்படி அந்நாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் வெற்றி கண்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு, எல்லா தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் ஹக்கானி தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.

அவர்கள் ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப்படையினருக்கும், ஆப்கான் மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களை ஒழிக்க தனித்து செயல்பட அமெரிக்கா தயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.