மத்திய வங்கியின் பிணை முறிவிற்கும் அதன் பின்னரான செயற்பாடுகளுடன் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஜே.வி.பி இன் தலைமையத்தில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனரின் வாக்கு மூலத்தில் பிரதமரின் செயற்பாடுகள் இருப்பதாகவும் இதன்போது பிரதமர் மத்திய வங்கியின் பிணை முறிவில் ஏல அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக அர்ஜுன மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகளில் இருந்தும், பிரதமரால் விலகிக்கொள்ள முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த தேர்தலின் போது ஊழலுக்கு எதிராக அரசாங்கம் செயல்படும் என்ற வாக்குறுதியை மழுங்கடித்து வருவதாகவும் அநுர குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியானது பொது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்யும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. இதற்காகவே பிரதமர் தனது நெருங்கிய நண்பரை ஆளுநராக நியமித்திருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.