ஜெயலலிதாவிற்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை..

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்தும்   முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று 41-வது நாளாக, முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 10.05 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவர், மதியம் 2.15 மணிக்கு வெளியே சென்றார். மீண்டும் மாலை 4.20 மணிக்கு உள்ளே சென்ற அவர், மாலை 6.15 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார்.

இதேபோல், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோரும் காலை முதலே அவ்வப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்தனர். தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு வாரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் நம்பப்படுகின்றது.