கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைவதற்கு முற்பட்ட, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, மூவர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, அவ்வமைச்சின் செயலாளருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்னவை தலைவராக கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, கடந்த எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி, திங்கட்கிழமை(07) காலை பேரணியாகச் சென்றதுடன், ஜனாதிபதி செயலகத்துக்குள்ளும் அத்துமீறி நுழைவதற்கு முயன்றனர்.
இதன்போதே கலகமடக்கும் பொலிஸார், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தி கலைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.