பந்துல குணவர்தனவால் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் மத்திய வங்கிக்கு உள்ள அதிகாரங்களை குறைப்பதற்குறிய யோசனை அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனை மூலம் வரி அறவிடும் அதிகாரத்தை வங்கிக் கட்டமைப்பில் இருந்து நீக்கி வேறு தனியார் நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனூடாக அரசியலமைப்பின் கீழ் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், அதனூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென்று தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் மனுமீதான விசாரணை நிறைவடையும் வரை அந்த தனியார் நிதி பிரிவு செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.