கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத்தின் வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சின் கீழான மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தை மன்னார் முருங்கனில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாத், அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சொய்ஸா;
நல்லாட்சி அரசாங்கத்தை நாம் அமைத்ததன் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். பாதைகளையும் கட்டடங்களையும், விமான நிலையங்களையும் மாத்திரம் அமைப்பதன் மூலமோ அபிவிருத்திப் பணிகளை முடுக்கி விடுவதன் மூலமோ நமது நோக்கம் நிறைவேறாது. மாறுபட்ட சிந்தனைகளிலும் மனப் போக்குகளிலும் கடந்த காலங்களில் வாழ்ந்த நம் நாட்டு மக்களின் சிந்தனைகளில் தெளிவு ஏற்பட வேண்டும்.
மூவின மக்களுக்கும் நல்ல சிந்தனைகள் ஏற்படுவதன் மூலமே நாம் உரிய இலக்கை அடைய முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க இணைந்து உருவாக்கிய இந்த ஆட்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒரு முக்கிய பங்காளியாவார்.
தனிக்கட்சி ஒன்றை அமைத்தது மட்டுமன்றி இந்த ஆட்சியின் பங்குதாரராக இருக்கும் அவர், அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக விளங்குகிறார்.
பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட சில மக்களுக்காக மாத்திரமல்லாது பாதிக்கப்பட்ட அனைவருக்குமே குரல் கொடுப்பவர். இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு உதவுபவர். இந்த விடயங்களை பெருமையாக கூறிக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அரசியல் வாதிகளான நாங்கள் இன, மத, குல, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பணியாற்றுவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்நாடு மிகவும் அழகான நாடு வடக்கிலே தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர், கிழக்கிலே முஸ்லிம்கள் வாழ்கின்றனர், மலையகத்திலேயும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவ்வாறு பரந்துபட்டு வாழும் நமது மக்களுக்கிடையே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இருந்தால் இந்நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் இதன் பொது தெரிவித்திருந்தார்.