டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தரவரிசையில் பல இடங்கள் முன்னேறி உள்ளார். குறிப்பாக கடைசி டெஸ்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
887 புள்ளிகளுடன் அஸ்வின் முதல் இடத்திலும், 879 புள்ளிகளுடன் ஜடேஜா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் இரண்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது மிகவும் அரிதாக நடைபெறும் ஒரு விடயமாகும்.
அத்தோடு இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் 867 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா 26 விக்கெட்டுகளையும் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா உறுதுணையாக இருந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா வீழ்த்திய 7 விக்கெட்டுகள் தான் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
அத்தோடு அஸ்வினுக்கும், ஜடேஜாவிற்கும் 8 புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
