ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிப்பதற்கான வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தவும், அதற்காக விசேட நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அனுமுகம தெரிவித்திருந்தார்.
இதற்கான வரைபை அமைச்சர் நேற்று இரவு(03) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய விசேட நீதிபதிகள் குழுவை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக அமைச்ச ரவை அங்கீகாரம் பெறப்பட்ட இந்த வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஊழல், மோசடி தொடர்பாக விசாரணைகளுக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து யோசனை ஒன்றை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது