2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று(09) காலை கூடியது.
கன்னியமர்வுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அரசியலமைப்பு சபையின் ஆறு உப- குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு, கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை கூடவிருந்தபோதும் அந்தக் கூட்டம், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் இன்று ஆரம்பமாகவிருந்த, ஆறு உப-குழுக்களின் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மீதான விவாதமும் இடம்பெறாது. ஆகையால், இன்றைய சபையமர்வு சுமார் 30 நிமிடங்களுக்கு சுருக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
காலை 9:30க்கு கூடிய சபையமர்வு, பிரதான நடவடிக்கைகளுக்கு பின்னர் காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்ற செயற்பாட்டுகள் தொடர்பிலான நாட்காட்டியிலும் அவையமர்வு 10 மணிக்கு நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.