முச்சக்கர வண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வர்த்தமானி மூலம் விசேட உத்தரவு…

பயணிகள் முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வர்த்தமானி மூலம் விசேட உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, பயணிகள் முச்சக்கர வண்டிக்கு மீட்டர் பொறுத்துதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பற்றுச்சீட்டையும் வழங்குவது சாரதிகளின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் வலது பக்க கதவு அரைவாசியாக அல்லது முழுமையாக பூட்டப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள், பயணிகள் அறிந்து கொள்வதற்கு தெளிவாக பதிவு இலக்கம், தனது பெயர், சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், தனது புகைப்படம் மற்றும் அவசர நிலைமை ஒன்றில் தொடர்பு கொள்வதற்கு முச்சக்கர வண்டி பதியப்பட்ட காவற்துறை நிலைய தொலைப்பேசி இலக்கம் போன்றன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணிகளின் குறித்த இடத்தினை அடைவதற்கு குறுகிய வீதிகள் இருக்கும் நிலையில், நீண்ட தூர வீதிகள் மூலம் பயணியின் குறித்த இடத்திற்கு அழைத்து செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், சேவையில் ஈடுபட்டிருக்கும் போது புகைப்பொருள் பயன்படுத்தக் கூடாது.

இதனிடயே, பயணிகள் தமது பொருட்களை மறதியாக முச்சக்கர வண்டியில் வைத்து சென்றுவிட்டால், அதனை அருகாமையில் உள்ள காவற்துறையிடம் ஒப்படைப்பது சாரதிகளின் பொறுப்பு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.