மொரகந்த களுகங்கை தி்ட்டத்தில் காணிகளிழந்தோருக்கு விரைவில் மாற்று இடங்கள்

மொரகந்த களுகங்கை திட்டத்தினால் காணிகளை இழந்த தெற்கு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு காணிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மகாவெலி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் வசந்த அளுவிகார கூறியுள்ளார்.

மாத்தளை மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்; இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாற்று இடங்கள் பெற்றுக்கொடுக்கும் புதிய முன்மொழிவை அமைச்சரவையில் முன்வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் முறையாக ஆய்வு செய்து பொருத்தமான இடங்கள் அடையாளங்காணப்பட்டு- எவருக்கும் அநீதி இடம்பெறா வண்ணம் காணிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறினார்.

இக்கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த மகாவெலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அநுர திஸாநாயக்க; குறித்த இடங்களில் இடம்பெற்றுக்கொடுப்பதுடன் நாவுல, ஓபல்கலவத்த- மெதிரிகிரிய ஆகிய பிரதேசங்களிலும் காணிகள் வழங்க ஆலோசித்தபோதும் சில குடும்பங்கள் அங்கு செல்ல விருப்பமில்லாமையினால் பிரச்சினைகள் தோன்றியுள்ளன என்று கூறினார்.