பாண் உட்பட பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அதிகரிப்பு….

பாண் உட்பட பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அடுத்த சில நாட்களில்அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று(16) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கலவைப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையினாலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மாஜரின், பாம் எண்ணெய்,கோதுமை மா மற்றும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கலவைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுமாயின் பேக்கரி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் மாஜரின் கொள்வனவு செய்ய 185 ரூபா செலவாகுவதாகவும், ஒரு லீட்டர் பாம் எண்ணெய் கொள்வனவு செய்ய 120 ரூபா செலவாகுவதாகவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.