இலங்கையில் வறட்சியை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதாக ஐ.நா உறுதி அளித்துள்ளது.
இலங்கைக்கான, ஐ நாவின் வதிவிடப் பிரதிநிதி உன்னா மக்கோலி, உலக உணவுத் திட்டப் பிரதிநிதி இமெல்டா பிரெஜெனா, ஆகியோர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, நாட்டில் நிலவும் வறட்சி நிலை குறித்தும் அதற்கான நிவாரண ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.
வறட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கான செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ள, ஐ.நா பிரதிநிதிகள், இந்த அனர்த்த நிலை குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
முதல் நடவடிக்கையாக வறட்சி நிலை தொடர்பான தொடர்பாடல், மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்களை வழங்க முடியும் என ஐ நா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வறட்சி காரணமாக தொழில்களை இழந்த கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது நிறுவனத்தினால் வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி தெரிவித்தார்.