GSP+ வரிச்சலுகை, 58 நிபந்தனைகளுக்கு அரசு உடன்படவில்லை – அரசு

இலங்கைக்கு GPS+ வரிச்சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு மிகப்பாரதூரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
அரசதகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கை ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் இலங்கைக்கு GSP+ வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தினர் ஜனவரி மாதம் 11ம் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பாராதூரமான நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளமையினாலேயே ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட கூற்றில் எந்தவித உண்மையும் இல்லை. சமகால அரசாங்கத்தின் மூலம் நாட்டில் நல்லாட்சி மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பே இதுவாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் எவ்வித நிபந்தனைகளும் மீறப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்படவில்லை. நிலைபேறான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் நல்லாட்சி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையிலேயே இந்த சலுகையை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் நடைபெற்ற இருதரப்பு மற்றும் பல்தரப்பு பேச்சுவார்த்தைகளில் மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி குறித்து இலங்கையின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தீர்மானமானது அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவதாக அமைவதாகவும் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(நன்றி – அரச ஊடகம்))