முகநூல் ஊடாக அறிமுகமான பெண் ஒருவரின் எட்டரை லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜை ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரையில் குறித்த நைஜீரிய பிரஜையை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டு நைஜீரியாவிலிருந்து நத்தார் பண்டிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரி செலுத்த வேண்டுமெனக் கூறி> குறித்த பெண்ணிடம் எட்டரை லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த நைஜீரிய பிரஜையின் இலங்கையில் காணப்படும் மூன்று வங்கிக் கிளைகளுக்கு அந்தப் பெண் பணத்தை வைப்புச் செய்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜையிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரை மொழி பெயர்ப்பாளராக பயன்படுத்திக் கொள்ள புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு வார காலத்திற்குள் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பியோஸ் இந்திராஸி என்ற என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த காரணத்திற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கம்ஹா டிக்மன்ஸ் வீதியில் அமைந்துள்ள 29 வயதுடைய திருமணமான பெண் ஒருவரிடம் இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
865000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.