இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகை தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கருத்து பிழையானது – மலிக் சமரவிக்ரம…

ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

குறித்த தொழிற்சாலைக்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் சிறிய தொகை பணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது தவறான கருத்து என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச அளவையாளர்களால் அளவிடப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக அந்த இடம் 99 வருட குத்தகை அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்குறிய ஆண்டுக்கான வாடகைத் தொகை 10,000 ரூபா என்று கூறியுள்ள அமைச்சர், அதற்கு மேலதிகமாக அளவிடப்பட்ட பெறுமதியின் படி 170 மில்லியன் ரூபா ஒரே தடவையில் அரசாங்கத்திற்கு அந்நிறுவனத்தால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.