நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது, பல பிரதேசங்களில் 100mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும், மின்னல் தாக்குதல் தொடர்பிலான அவதான எச்சரிக்கையும் அத்திணைக்களம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் கிழக்கு பிரதேசங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த காலத்தில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் 23% வரை நீர் மட்டம் குறைவடைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நீர்மட்டம், 32% அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.