ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமக்கான இணைப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களாக 196 பேரை நியமித்திருந்தாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ளபோதே ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் (மைத்திரிபால சிறிசேன) அவரது பணியாட்கள் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள சகல ஆலோசகர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், பிரத்தியேக உதவியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்காக வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விவரங்களைக் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ராஜாங்க அமைச்சர் நிரேஷன் பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களாக 196 பேரை நியமித்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆலோசகர்கள் மற்றும் பணியாட்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 92.5 மில்லியன் ரூபாவை செலவழித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தற்போதைய ஜனாதிபதி தமக்கு நான்கு ஆலோகர்களை நியமித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆலோசகர்களுக்காக 19 மில்லியன் ரூபாவையே செலவிடுவதாகவும் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.