உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரிசி வகைகளுக்கு 2 நிர்ணய விலைகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக அரிசி மாபியா தோற்றுவிக்கப்படுவதாக அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரிசி வகைகளுக்கு 2 நிர்ணய விலைகளை விதிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுப்பதாக அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்த குறிப்பிட்டார்.
அரச தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அரிசி விற்பனையாளர்கள் வெள்ளை அரிசி 1Kg 78 ரூபாவாகவும் நாட்டரிசி 1Kg 80 ரூபாவாகவும், சம்பா அரிசி 1Kg 95 ரூபாவாகவும் விற்பதற்கு கோரிக்கை விடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக அரிசிக்கான 2 நிர்ணய விலைகள் காணப்படுவதாக நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, சந்தையில் உள்ளூர் அரிசிக்குப் பதிலாக வெளிநாட்டு அரிசி வகைகளை நுகர்வோரை ஏமாற்றி, விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.