சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை ஆயுதப் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளாக சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆயுத பயிற்சி எதுவும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையாக வழங்கப்படும் ஆயுதப் பயிற்சியைத் தவிர வேறும் ஆயுதப் பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆயுதமொன்றை செயற்படுத்தி இருப்பார்கள் எனவும் அதன் பின்னர் ஆயுதமொன்றை செயற்படுத்துவதற்கு சந்தர்ப்பமே கிடைத்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் உத்தியோகத்தர்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு காரணமாக பயிற்சிகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் சிறைச்சாலை திணைக்கள காரியாலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கூட, சில சந்தர்ப்பங்களில் கைதிகள் வழக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.