ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் இன்று(08) நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும், சமாதானத்திற்கும், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளப் போவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் குறித்த சங்கத்தின் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு குறித்த இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.