தமிழக மீனவர் கொலை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை நாடுகிறது மீனவர் அமைப்பு…

இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இந்திய மீனவர் அமைப்பு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடொன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் பிரிட்ஜோ என்பவர் கடந்த 6 ஆம் திகதி, இலங்கை கடற்படையால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், இரு நட்டு அரசாங்கங்களும் குறித்த விடயம் தொடர்பாக, தமது மௌனத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தாம் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடவுள்ளதாக தேசிய மீனவத் தொழிலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இறந்த பிரிட்ஜோவின் உடலிலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மரணம் குறித்து தமக்கு நீதியும், குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையும் ஏற்படுத்தவே குறித்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை தரப்பு, தமது படையினருக்கு எந்த மீனவரையும் சுடுவதற்கான உத்தரவை தாம் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ரஞ்சித் சிங், பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.